Connect with us

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் – செல்வப்பெருந்தகை அதிரடி அறிவிப்பு..!!

Featured

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் – செல்வப்பெருந்தகை அதிரடி அறிவிப்பு..!!

கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வரும் போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது தான் குடியுரிமை திருத்தச் சட்டம். அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு துருபிடித்துப் போன பழைய அஸ்திரத்தை இன்றைக்கு பா.ஜ.க. கையில் எடுத்து, மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்குத் தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க. அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பதவிக் காலம் முடியும் நேரத்தில் தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் பட்டியலை வெளியிட வேண்டுமென்ற உச்சநீதின்றத் தீர்ப்பு பா.ஜ.க.வுக்கு மரண அடியாக விழுந்துள்ளது. அதிலிருந்து தப்பிக்கவும், மக்களை திசைதிருப்புவதற்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க. நிறைவேற்ற முயற்சி செய்கிறது. ஆனால், எத்தகைய முயற்சிகள் எடுத்தாலும் பா.ஜ.க.வின் வீழ்ச்சியை தடுக்க முடியாது.

சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் கைவிடும் சட்டம் தான் பா.ஜ.க.வின் குடியுரிமை திருத்தச் சட்டம். இந்த சட்டம் இஸ்லாமியர் மீதான வெறுப்பை விதைக்கிறது. மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது அரசமைப்புச் சட்டம். ஆனால், மத சிறுபான்மையின மக்களை புறக்கணிக்கிற ஒரு சட்டத்தை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் இதை அமல்படுத்த முயல்வதை விட ஒரு ஜனநாயக விரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். அனைவரும் வரலாம் என்று சொல்லவில்லை. அந்த நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் நீங்கலாக மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள்.

இஸ்லாமியர்களை ஏன் புறக்கணிக்க வேண்டும் ? சிறுபான்மையின மக்கள் மீதான வெறுப்பை விதைப்பதன் மூலமாக வாக்கு வங்கியை விரிவுபடுத்துவதே பிரதமர் மோடியின் நோக்கமாகும். மக்களை பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்துவதன் மூலம் வருகிற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். அவரது கனவை தகர்க்கத் தான் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், தற்போது மணிப்பூர் முதல் மும்பை வரையிலும் மாபெரும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அவரது பயணம் பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுகட்டுகிற பயணமாகும்.

இந்நிலையில், 10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியினால் பொருளாதார பேரழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக வர இருக்கிறார்.

See also  காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!

தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் அருகே நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார் அவர்கள் தலைமையில்,மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் டாக்டர் வி.எம். பினுலால் சிங், திரு. கே.டி. உதயம், திரு. ஜெ. நவீன்குமார் ஆகியோர் முன்னிலையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதில் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திரு. விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திரு. ஜே.ஜி. பிரின்ஸ் மற்றும் வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top