Connect with us

ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற்றிடுக – திருமாவளவன் வலியுறுத்தல்

Featured

ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற்றிடுக – திருமாவளவன் வலியுறுத்தல்

மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் விடுத்துள்ள வெள்யிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

நாடாளுமன்றத்தில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தினேன். மாண்புமிகு அவைத் தலைவருக்கு வணக்கம். 2024 ஆம் ஆண்டுக்கான நிதி மசோதாவில் உரையாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியமைக்காக என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் சனவரி 26 குடியரசு நாள் அன்று எமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் வெல்லும் சனநாயகம் மாநாட்டை நடத்தினோம்.

10 லட்சத்திற்கும் மேலானவர்கள் பங்கேற்ற மாபெரும் மாநாட்டில் எமது தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் எல்லோரும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள். அதில் 33 தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்றினோம்.

அவற்றில் ஓரிரு தீர்மானங்களை நான் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஜிஎஸ்டி வரி விதிப்பை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பது ஒரு தீர்மானம். நிதி பகிர்வில் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பது இன்னொரு தீர்மானம். இந்த இரண்டு தீர்மானங்களும் மிக முக்கியமானவையாக நான் கருதுகிறேன்.

ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பின் மூலம் பல்வேறு வகையில் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மாநில அரசுகள் இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஜிஎஸ்டி வரி இழப்பால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட வரி இழப்பை ஈடு செய்வதற்கு இழப்பீடு தருவதாக சொல்லி அது 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் மாநில அரசுகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. மேலும் கூடுதலாக செஸ் மற்றும் சர்ச்சார்ஜ் போன்ற வரி விதிப்பை விதித்து அதன் மூலம் மாநில அரசுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே, இந்திய ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற்றுக் கொண்டு மாநில அரசுகளோடு கலந்து பேசி மாற்று வகையிலான வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் இன்று நான் இங்கே மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நிதிப் பகிர்வு குறித்து நிதிக் குழு பரிந்துரை செய்து வருகிறது. 14வது நிதிக்குழு மாநில அரசுகளுக்கு 42 சதவீதம் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கூறியது. 15வது நிதிக் குழு மாநில அரசுகளுக்கு 41% மொத்த வரி வருவாயில் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து இருக்கிறது . ஆனால் மொத்த வரி வருவாயில் இன்று indivisible taxes என்கிற அந்த வரியை இந்திய ஒன்றிய அரசு முழுமையாக எடுத்துக் கொண்டு எஞ்சிய வரி வருவாயில் 35 சதவீதம் 14வது நிதிக் குழு, 30 சதவீதம் 15வது நிதிக் குழு என்கிற அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்து அளித்து இருப்பது மிகப்பெரிய மோசடியாகும்

See also  பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய மும்பை - லக்னோ அணிக்கு 145 ரன்கள் இலக்கு..!!

ஓரவஞ்சனையாகும். எனவே, இந்த 16வது நிதிக் குழுவில் நீதியை நிலைநாட்டக் கூடிய வகையிலே மாநில அரசுகளுக்கு நேர்மையான முறையில் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும்.

குறிப்பாக, மாநில அரசுகள் தங்களுடைய தற்சார்பை இழந்திருக்கக் கூடிய நிலையில் 75 விழுக்காடு அந்த வரி வருவாயில் அவர்களுக்கு நிதியை பகிர்ந்து அளிப்பதற்கு ஏற்ற வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். அதை மீண்டும் நான் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்

வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒப்புகை சீட்டு 100% இணைக்கப்பட வேண்டும். அதனை எண்ணி முடித்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் மிக முக்கியமானதாகும். அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று நான் இந்திய ஒன்றிய அரசுக்கு வேண்டுகோளாக விடுக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே மதம் என்கிற கொள்கைகளை முழங்கி இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் இந்திய இன்றைய ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.

ஆனால், எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்துவதாக குற்றம் சுமத்துவது எந்த வகையிலும் ஏற்புடையது இல்லை. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் “வடக்கு தெற்கு என்கிற பாகுபாடு வளர்கிறது”.

ராஜாஜி என்ற ராஜகோபாலாச்சாரியார் அவர்களே இந்த கவலையை பதிவு செய்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று அன்றைக்கு புரட்சியாளர் அம்பேத்கர் தமது கவலையை பதிவு செய்திருக்கிறார்.அந்த நிலையை உருவாக்கக்கூடிய வகையில் இன்றைக்கு செயல்பட்டு வருவது இந்திய ஒன்றிய அரசு தான் என்று நான் குற்றம் சாட்ட விரும்புகிறேன்.

கடைசியாக ஒரே ஒரு வேண்டுகோள் தாக்கூர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதை நான் வரவேற்கிறேன் பாராட்டுகிறேன். அதேபோல சமூகநீதி காவலராக தமது வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட விபி சிங் அவர்களுக்கும் தந்தை பெரியார் அவர்களுக்கும் கான்சிராம் அவர்களுக்கும் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று நான் கேட்டு இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி முடிக்கிறேன் நன்றி வணக்கம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top