Connect with us

லைகா நிறுவனத்தின் வழக்கில் நடிகர் விஷால் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Politics

லைகா நிறுவனத்தின் வழக்கில் நடிகர் விஷால் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ், நடிகர் விஷாலுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்றம் அவரிடம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்னவெனில் — நடிகர் விஷால், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் பெற்றிருந்த ரூ.21 கோடி கடனை, லைகா நிறுவனம் அவருக்குப் பதிலாக செலுத்தியிருந்தது. அதற்கான ஒப்பந்தத்தின் படி, விஷால் தயாரிக்கும் படங்களின் உரிமைகள், அந்தத் தொகை முழுமையாக திருப்பி அளிக்கப்படும் வரை லைகா நிறுவனத்துக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், லைகா நிறுவனத்துக்குத் தெரியாமல் விஷால் சில திரைப்படங்களை நேரடியாக வெளியிட்டதாக நிறுவனம் குற்றம்சாட்டியது. இதையடுத்து, ரூ.21 கோடியே 29 லட்சம் தொகையை 30 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் எனக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஷால் அந்தத் தொகையை வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக லைகா நிறுவனம் தற்போது கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், அந்த மனு நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. லைகா நிறுவனத்தின் சார்பில் வக்கீல், “விஷால் தற்போது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மகுடம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப்படத்துக்கான ஊதியத் தொகையை நீதிமன்ற கணக்கில் டெபாசிட் செய்ய நடிகர் விஷாலுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நடிகர் விஷால் இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2026 தேர்தலுக்குத் தயாராகும் அதிமுக — கூட்டணிக்காக கையேந்தியும், மூன்றாம் இடமே நிச்சயம்! ஓபிஎஸ் அதிரடி விமர்சனம்

More in Politics

To Top