தோனி அணியில் இருப்பதால் சென்னை அணிக்கு இன்னும் கூட ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு மேலும் குறைந்தது.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இர்பான் பதான் கூறிருப்பதாவது : “யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மீண்டுவிடலாம். எனவே சிஎஸ்கே இப்போது கடைசி இடத்தில் இருப்பதற்காக வருத்தப்பட தேவையில்லை.
சரியான திட்டமிடல் இருந்தால் மீண்டும் வெற்றிப் பெற முடியும். அந்த அணிக்காக நான் 2015 ஆம் ஆண்டு விளையாடி இருக்கிறேன். சிஎஸ்கேவுக்கு தன்னுடைய வீரர்களை பயன்படுத்த நன்றாகவே தெரியும். ஆனால் இவையெல்லாம் வீரர்களின் கையில்தான் இருக்கிறது” என்றார் இர்பான் பதான்.

நடந்த இத்தனை ஆண்டுகால ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது . அந்த அணியில் இப்போது சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லை என்பது பின்னடைவுதான். ஆனால் அவர்களுக்கு சிறந்த கேப்டனாக தோனி இருக்கிறார். அணி இப்போது இருக்கும் நிலையிலிருந்து முன்னோக்கி எடுத்துச் செல்ல தோனியால் முடியும். அதுதான் சிஎஸ்கேவுக்கு பலம்” என தெரிவித்துள்ளார் .